வணிக ரீதியில் ராக்கெட்டுகளை ஏவுவதில், உலக சந்தையில் முக்கிய இடத்தை இந்தியா பிடித்துள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிசம்பர் 24) காலை 8.54 மணிக்கு எல்விஎம்- 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட செயற்கை கோளுடன் இந்த ராக்கெட்டை ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்திய விண்வெளித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோளான அமெரிக்காவின் 'புளூபேர்ட் ராக்கெட் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
வணிக ரீதியில் ராக்கெட்டுகளை ஏவுவதில், உலக சந்தையில் முக்கிய இடத்தை இந்தியா பிடித்துள்ளது. வளர்ச்சி அடைந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பாகும். நமது கடின உழைப்பாளிகளான விண்வெளி விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்திய இளைஞர்களால் இயக்கப்படும் நமது விண்வெளித் திட்டம் மிகவும் மேம்பட்டதாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மாறி வருகிறது. எல்.வி.எம்., 3 ராக்கெட் செயல்திறனை வெளிப்படுத்துவது வாயிலாக, ககன்யான் போன்ற எதிர்காலப் பணிகளுக்கான அடித்தளங்களை வலுப்படுத்துகிறோம். வணிக ஏவுதள சேவைகளை விரிவுபடுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.