கரூர் கூட்டநெரிசல் வழக்குத் தொடர்பாக டெல்லியில் தவெக தலைவர் விஜய், சிபிஐ. முன்பு இரண்டாவது முறையாக இன்று ஆஜராகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் உள்பட பலரிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் தவெக நிர்வாகிகளுக்கு டெல்லியில் இருந்து சிபிஐ சம்மன் அனுப்பியது. இதன் அடிப்படையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து தவெக தலைவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜரானார்.அங்கு சுமார் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு விஜய் பதிலளித்ததாக கூறப்படுகிறது.
சிபிஐ நடத்திய முதற்கட்ட விசாரணை முடிந்த பின் விஜய் சென்னை திரும்பினார். இந்த நிலையில், சிபிஐ முன் இரண்டாவது கட்ட விசாரணைக்கு விஜய் ஜனவரி 19-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்காக இரண்டாது முறையாக தவெக தலைவர் விஜய், சிபிஐ அதிகாரிகள் முன்பு இன்று ஆஜராகிறார். இதற்காக அவர் நேற்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.