கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்க டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் உள்பட 8பேர் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டும், தொலைபேசியில் அழைத்து வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் டிசம்பர் 29-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
காவல்துறை தரப்பில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ்தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி செல்வராஜ், ஆய்வாளர் ஜி. மணிவண்ணன் ஆகியோருக்கும் அதே தேதியில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்க்கும் சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஜனவரி முதல் வாரத்தில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.