மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசிய பேச்சுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளது. இந்த கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இவர் முதல் முறையாக நேற்று (பிப்ரவரி 4) பேசினார். அவர் பேசிய பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது. மாநிலங்களவையில் கமல்ஹாசன் பேசுகையில்," பிச்சைப் பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்துக்கு உதவாது என்று தெரிந்தவர் நீங்கள். நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ்… பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது" என்றார்.
கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,, " மாநிலங்களவையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ் மொழியைப் பற்றி இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாக கமல்ஹாசன் ஒரு தவறான தகவலைத் தெரிவித்துள்ளார். கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வில், நிதியமைச்சர், ஈ.வெ. ராமசாமி நாயக்கர் கூற்றையே தெளிவாக மேற்கோள் காட்டினார்; அது அவருடைய சொந்தக் கருத்து அல்ல. இது குறித்த வீடியோ ஆதாரத்திற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.