அணுசக்தித் திட்டத்தைத் தொடங்கினால் ஈரானை சின்னாபின்னமாக்குவோம் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், புளோரிடாவில் உள்ள அவரது இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஈரானுக்கு எதிராக புதிய ராணுவ நடவடிக்கைகளை எடுப்பதன் அவசியம் குறித்து டிரம்ப், நெதன்யாகு ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
இது தொடர்பாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில்," முக்கிய அணுசக்தி செறிவூட்டல் தளங்கள் மீது ஜூன் மாதம் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தித் திறன்கள் முற்றிலும் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டன.
இப்போது ஈரான் மீண்டும் கட்டமைக்க முயற்சிக்கிறது என்று நான் கேள்விப்படுகிறேன். அவர்கள் அப்படிச் செய்தால், நாம் அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டியிருக்கும். அவர்களைச் சின்னாபின்னமாக்குவோம். அந்த திட்டத்தை முற்றிலுமாக அழித்துவிடுவோம். ஆனால், அப்படி அவர்கள் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
மேலும், இஸ்ரேல்- ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை எங்களால் முடிந்தவரை விரைவாக அடைய விரும்புகிறோம். ஆனால், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். நாங்கள் பேச்சுவார்த்தையில் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம். மூன்று பிரச்னைகளை ஏற்கெனவே தீர்த்துவிட்டோம். தவறான பிரதமர் இருந்திருந்தால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது" என்றார்.