திமுகவை வீட்டுக்கு அனுப்ப இரண்டு மாதம் தான் உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (டிசம்பர் 30) சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோயில் வாசலில் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், " திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அதற்காக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக முயற்சி எடுத்து வருகிறார்கள். கார்த்திகை தீபத்தின்போது பக்தர்கள் இங்கு வந்து முறையிடுவதும், அவர்களை கைது செய்து, அடைத்து வைப்பதும் என ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் பக்தர்கள் வழக்குத் தொடுத்து, உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்த பிறகும் கூட தீபம் ஏற்ற முடியாத சூழல் இருப்பது தமிழகத்தில் திமுக ஆட்சியில் எந்த அளவுக்கு அராஜகமும், அட்டூழியமும் நடைபெறுகிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
சிஐஎஸ்எப் வீரர்களையும் அனுமதிக்க முடியாத அளவிற்கு திமுகவின் அரசும், காவல் துறையும், மு.க.ஸ்டாலினும் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் கோபம் கொண்டிருக்கிறார்கள்.
திமுகவை வீட்டுக்கு அனுப்ப இரண்டு மாதம் தான் உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தி.மு.க. அரசு காலில் போட்டு மிதிக்கிறார்கள். அம்பேத்கரை மதிக்காத அரசு என்றால் அது திமுக அரசு தான்.
பூரண சந்திரன் மரணத்திற்கு ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். அறுபடை முருகனும் தமிழகத்தில் நடக்கும் அட்டூழியத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் இன்னும் இரண்டு மாதத்தில் பதில் கொடுப்பார்" என்றார்.