சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள், ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்களால், ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆதி. பிரபல ரவுடியான இவரது மனைவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக ஆதி இன்று (ஜனவரி 12) காலை மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த ஹெல்மெட் அணிந்த மூன்று பேர், மருத்துவமனைக்குள் வைத்து ரவுடி ஆதியை பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில், தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், விரைந்து வந்து ரவுடி ஆதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆதியை கொலை செய்தது அவரது தோழி சுசித்ராவின் கூட்டாளிகள் என்பது போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து தலைமறைவான சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.