இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இருந்த 9 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்..
இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான கப்பல், அரேபிய கடலில் ரோந்து பணியில் நேற்று நள்ளிரவு ஈடுபட்டிருந்தது. அப்போது பாகிஸ்தானின் மீன்பிடி படகு இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததைக் கண்டனர். அதில் இருந்தவர்கள் கப்பலைக் கண்டதும், பாகிஸ்தான் எல்லைக்குள் செல்ல முயன்றனர். ஆனால், இந்திய கடலோர காவல்படையினர் போர்ப்பந்தர் அருகே அந்த படகை சுற்றி வளைத்து பறிமுதல் செய்தனர். அதில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பாக, குஜராத் பாதுகாப்புத் துறையின் பிஆர்ஓ விங்க் கமாண்டர் அபிஷேக் குமார் திவாரி கூறுகையில்,, " அரபிக் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய கடலோர காவல்படை கப்பல், சர்வதேச கடல் எல்லைக் கோட்டுக்கு அருகில் இந்திய கடல் எல்லைக்குள் ஒரு பாகிஸ்தான் மீன்பிடிப் படகைக் கண்டது. இந்திய கப்பலைக் கண்ட அந்த படகு பாகிஸ்தான் பக்கம் தப்பிச் செல்ல முயன்றது. ஆனால்,, இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) பாகிஸ்தான் படகை பறிமுதல் செய்தது. அதில் இருந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
இதற்கு முன்பாக கடந்த 2025 டிசம்பரில் இந்திய கடல் எல்லைக்குள் பாகிஸ்தான் படகு அத்துமீறி நுழைந்தது. அப்போது இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) படகை சுற்றி வளைத்து அதில் இருந்த 11 பாகிஸ்தானியர்களை கைது செய்து உள்ளூர் கடல்சார் போலீஸாரிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.