டெல்லியில் கடந்த 27 நாட்களில் 807 பேர் காணாமல் போய் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் முதல் 27-ம் தேதி வரை 807 பேர் மாயமாகியுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போனவர்களைத் தேடி வந்தனர். இதில் 235 பேரை கண்டுபிடித்துள்ளனர். 572 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
போலீஸ் விசாரணையின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் சுமார் 27 பேர் காணாமல் போய் உள்ளனர். அப்படி காணாமல் போனவர்களில் தினமும் 9 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 27 நாட்களில் 191 குழந்தைகள் மாயமாகி உள்ளனர். அவர்களில் 48 குழந்தைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். 137 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதில் 120 பேர் சிறுமிகள் ஆவர். 616 பெரியவர்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களில் 90 ஆண்கள் மற்றும் 91 பெண்கள் என 181 பேரை போலீஸார் மீட்டுள்ளனர். இன்னும் 435 பேர் கண்டு பிடிக்கப்படவில்லை.
டெல்லியில் கடந்த 11 ஆண்டுகளில் 5,559 குழந்தைகள் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 695 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை டெல்லியில் 18 வயதுக்குட்பட்ட மொத்தம் 60 ஆயிரத்து 694 பேர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 53,763 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6,931 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. இதில் 12 வயது முதல் 18 வயது வரையிலான பெண்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.