திராவிடத்தை வீழ்த்தி பொங்கல் வைப்பதே எங்கள் முதல் வேலையாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வளசவாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் பொங்கல் விழா இன்று (ஜனவரி 10) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதன் பின் செய்தியாளர்களிடம் சீமான் கூறுகையில்," இந்த பொங்கலுக்கு இதுவரை இல்லாத வகையில் தமிழக அரசு ரூ.3 ஆயிரம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் இந்த பொங்கல் மக்கள் பொங்கலாக இல்லாமல் அரசியல் பொங்கலாக மாறி இருக்கிறது. மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பதுதான் மக்கள் அரசியலாகும்.
சட்டமன்றத் தேர்தலில் பணபலத்துடன் இருப்பவர்கள் ஒரு பக்கமும் மக்கள் பலம் உள்ளவர்கள் இன்னொரு பக்கமும் இருக்கிறார்கள். நாங்கள் மக்கள் பலத்தோடு தனித்து களம் காண இருக்கிறோம். இந்த தேர்தலில் நிச்சயம் நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவோம். 'ஜன நாயகன்' படத்தை போன்று இதற்கு முன்னர் எனது படங்கள் உட்பட பல படங்களுக்கும் தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே அதனைப் பற்றி இப்போது பெரிதாக பேசிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.
அதைவிட முக்கிய பிரச்னைகள் பல உள்ளன. அதையெல்லாம் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆசிரியர்கள், செவிலியர்கள் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் முதலமைச்சர் 'ஜன நாயகன்' பட விவகாரத்தில் பாஜக அரசு மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் ரூ. 6,800 கோடியை செலவிட்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் 4½ ஆண்டுகளில் 4 லட்சம் கோடியையும் கடன் வாங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் தமிழக அரசின் கடன் சுமை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தல் திராவிடருக்கும் தமிழருக்குமான தேர்தலாக இருக்கும். திராவிடத்தை வீழ்த்தி பொங்கல் வைப்பதே எங்கள் முதல் வேலையாக இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் அதனை நிச்சயம் செய்து காட்டுவோம்" என்றார்.