மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை திருச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உரிமைகளை மீட்கவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சமத்துவ நடைபயணம் என்ற பெயரில் தனது 11-வது நடைபயணத்தை திருச்சியில் இன்று (ஜனவரி 2) தொடங்கி, மதுரையில் ஜனவரி 12-ம் தேதி நிறைவு செய்கிறார். இதன் துவக்க நிகழ்வு திருச்சியில் இன்று நடைபெற்றது. துரை வைகோ எம்.பி வரவேற்புரையாற்றினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்த நடைபயண நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியா கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. வைகோ நடத்தும் நிகழ்ச்சி அழைப்பிதழின் முகப்பில் எல்டிடிஈ இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படம் இடம் பெற்றிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோவின் நடைபயண தொடக்க விழாவை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.