அன்புமணி தரப்பைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களை பாமகவில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி(பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ்க்கும் இடையே நடைபெறும் அதிகாரப்போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பாமகவில் இருந்து அன்புமணியை கட்சியிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில், கட்சியின் தலைவர் பொறுப்பை மீண்டும் டாக்டர் ராமதாஸ் ஏற்றுக்கொள்வார் என கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அன்புமணி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சூழலில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக-தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அன்புமணி தரப்பு இணைந்துள்ளது. அதிமுகவுடன் அன்புமணி நடத்திய பேச்சுவார்த்தை நீதிமன்ற அவமதிப்பு மற்றும் சட்டவிரோதம் என்று ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக, அன்புமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், அன்புமணி தரப்பைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சிவக்குமார் (மயிலம் தொகுதி), சதாசிவம் (மேட்டூர் தொகுதி), வெங்கடேசன் (தர்மபுரி தொகுதி) ஆகியோரை பாமகவில் இருந்து நீக்கியதாக டாக்டர் ராமதாஸ் இன்று (ஜனவரி 12) அறிவித்துள்ளது பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.