தவெக தலைவரான நடிகர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆய்வு நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழக(தவெக) தலைவர் நடிகர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110-பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ ஏஎஸ்பி முகேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள், அக்டோபர் 16-ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், தவெக மாநில நிர்வாகிகள் ஆகியோரை டெல்லிக்கு அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஜனவரி 12-ம் தேதி தவெக தலைவர் விஜய் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார். இந்த நிலையில், கரூரில் விசாரணை மேற்கொண்டுள்ள சிபிஐ அதிகாரிகள், செப்டம்பர் 27-ம் தேதி விஜய் பிரச்சாரக் கூட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட அவரின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
அத்துடன் அந்த வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த வாகனத்தின் ஓட்டுநர் பரணிதரன் விசாரணை நடத்தினர். அவரிடம் நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட நேரம், எந்த இடத்தில் வாகனம் நிறுத்தப்பட்டது, எப்போது பிரச்சாரத்தைத் தொடங்கினார், எப்போது முடித்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைக் கேட்டு விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அந்த வாகனத்தை அளவீடு செய்யும் பணியிலும் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.