அனைத்து பகுதி மக்களும் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருக்கிறார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
மதுரையில் அன்புமணி இன்று (டிசம்பர் 27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், இளநிலை உதவி பேராசிரியர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைத்து பகுதி மக்களும் திமுகவிற்கு எதிராக போராடி வருகிறார்கள். அத்துடன் இவர்கள் திமுகவிற்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள்.வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையப்போகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்தஐற வளர்ச்சி என்று சொல்ல முடியாத அளவிற்கு தமிழகம் மைனஸில் உள்ளது. கடந்த ஆண்டு மைனஸ் 3.8 சதவீதம். இந்த ஆண்டு மைனஸ் 1.8 சதவீதம். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியவில்லை. ஆனால் கடனை மட்டும் அதிகமாக வாங்கியிருக்கிறார்கள். தமிழகத்திற்கு ரூ.9 லட்சத்து 55 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான். வட்டி மட்டும் ரூ.62 ஆயிரம் கோடி கட்டப்படுகிறது.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, பிஹார் என அனைத்து மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து உள்ளார்கள். தமிழகத்தில் தொழில் முதலீடு வந்து விட்டதாக பொய்யான தகவலை திமுக அரசு பரப்பி வருகிறது.
தேர்தல் பேச்சுவார்த்தை முடிந்த பின் விரைவில் எங்கள் கூட்டணி குறித்து அறிவிப்போம். வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும். ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்பது என் நிலை. நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும். அத்துடன் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.