காஸா அமைதிக் குழுவில் இடம்பெற இந்தியா உள்பட 60 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் குழுவினர் இடையே போர் நடைபெற்று வந்தது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன் முயற்சியால் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக முதல்கட்டமாகபிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.
இந்த சூழலில் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த ஒரு குழுவை அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைத்துள்ளார். இந்தக் குழுவில் இடம் பெற பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், காஸா அமைதிக்கான குழுவில் இடம்பெறுமாறு அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். துருக்கி, எகிப்து, அர்ஜென்டினா, இந்தோனேசியா, இத்தாலி, மொராக்கோ, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சுமார் 60 நாடுகளின் தலைவர்களை இந்த அமைதி குழுவில் சேருமாறு அமெரிக்கா அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.