வட இந்தியாவில் மூடுபனி காரணமாக ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் அடர்பனி நிலவி வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் மற்றும் விமான போக்குவரத்து இன்று பாதித்தது. மூடுபனி காரணமாக பல்வேறு மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு வரும் ரயில்கள் தாமதமாக வந்தன, இதனால் பயணிகள் சிரமப்பட்டனர். அடர்பனி நிலவி வந்ததன் காரணமாக டெல்லியின் முக்கிய ரயில் நிலையங்களான புது டெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன், பழைய டெல்லி மற்றும் ஆனந்த் விஹார் ஆகிய இடங்களில் அதிகாலை முதல் ரயில்கள் தாமதமாக புறப்பட்டன.
புது டெல்லி ரயில் நிலையத்திற்கு வரும் (வண்டி எண் 22417) மஹாமனா எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது. இதற்கிடையில் ( வண்டி எண் 20407 )ராஞ்சி-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் 51 நிமிடங்கள் தாமதமாக வந்தது. அதிகபட்சமாக (வண்டி எண் 22823) புவனேஸ்வர்-புது டெல்லி தேஜாஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 4 மணி நேரம் 3 நிமிடங்கள் தாமதமானது.
இதே போன்று ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திலும் ரயில்கள் தாமதமாக புறப்பட்டன.. இங்கு (வண்டி எண் 12189) மகாகௌஷல் எக்ஸ்பிரஸ் சுமார் 1 மணி நேரம் 50 நிமிடங்களும், (வண்டி எண் 12059) ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் சுமார் 1 மணி நேரமும், (வண்டி எண் 18477) கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் 30 நிமிடங்களும் தாமதமானது. பழைய டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்த ( வண்டி எண் 15705) சம்பாரன் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் 23 நிமிடங்கள் தாமதமானது. புது டெல்லி- பழைய டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் மற்றும் ஆனந்த் விஹார் ரயில் நிலையங்களுக்கு வந்த பல்வேறு ரயில்கள் ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தன..
மூடுபனியின் தாக்கம் காரணமாக ரயில்கள் மட்டுமின்றி விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. டெல்லியில் இருந்து பாக்டோக்ராவுக்கு (SG-903) செல்லும் விமானம், புது டெல்லியில் இருந்து தர்மசாலாவுக்கு (SG-2939) செல்லும் விமானம், டெல்லியில் இருந்து தர்பங்காவுக்கு (SG-495) செல்லும் விமானங்கள் இன்று இயக்கப்படவில்லை. இதற்கிடையில், டெல்லியில் இருந்து மும்பைக்கு (SG-664) செல்லும விமானம் பிற்பகல் 3:25 மணிக்கு தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், டெல்லியில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் ( SG-131) தாமதமாக மாலை 4:20 மணிக்கு புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் (6E-6946) இன்று இயக்கப்படவில்லை. இதன் காரணமாக பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.