நைஜீரியாவில் இரண்டு கிராமங்களில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 162 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள குவாரா மாநிலத்தில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் இரண்டு கிராமங்களுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 162 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். குவாராவில் உள்ள வோரா உள்ளிட்ட இரண்டு கிராமங்களுக்குள் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டனர். அத்துடன் அங்கிருந்த கடைகளையும், மன்னரின் அரண்மனையையும் தீ வைத்து எரித்தனர்.
இந்த தாக்குதலில் 162 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத குழுக்களே காரணம் என அரசு குற்றம் சாட்டியள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பலர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர். இன்னும் பல சடலங்கள் கிடைக்கலாம். பாரம்பரிய மன்னர் எங்கு இருக்கிறாரென தெரியவில்லை என அதிகாரிகள் கூறினர். குவாரா மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான் அப்துல் ரஸாக் இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மாநிலத்தில் நடந்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்ட விரக்தியில் பயங்கரவாத குழுக்கள் இந்தக் கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளன என தெரிவித்தார். குவாரா மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 162 பேர் கொல்லப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் சையது பாபா அஹமது தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலையடுத்து தீவிரவாதிகள் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நைஜீரிய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.