'ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும்'
அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்
தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பேசிய கருத்து சர்ச்சையானது. இந்நிலையில், அவரது பேச்சு சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்ததற்கு பதில் அந்த நிதியை அங்குள்ள கரும்பு சர்க்கரை ஆலையை செயல்பட அனுமதித்திருந்தால் ஐந்து மாவட்ட விவசாயிகள் பலன் பெறுவார்கள்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளால் இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்ற தொனியில் பேசியதாகக் கூறி குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அமைச்சர் நிர்மல் குமார் உட்பட அமைச்சர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், எம்எல்ஏ கருப்பையா பேசிய கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு, காணொளி துண்டிக்கப்பட்டு (Edited) சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, எம்எல்ஏ கருப்பையாவும் தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்தார். "ஜல்லிக்கட்டு போட்டிகளை நான் என்றும் எதிர்த்ததில்லை. காளைகளை வளர்க்கும் இளைஞர்கள் மற்றும் அதில் பங்கேற்பாளர்களின் நலன் சார்ந்தே பேசினேன். எனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, பிரித்து சித்தரிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டும், தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கும் வகையிலும், எம்எல்ஏ கருப்பையாவின் 'ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும்' என்றபேச்சு சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
சபாநாயகரின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பேரவையில் நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.