அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திக்கை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீஸார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.நாட்டையே உலுக்கிய இந்த வழக்குத் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது. அப்போது கார் குண்டு வெடித்ததன் பின்னணியில் இருந்த மருத்துவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும், ஹரியாணாவில் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள அல் ஃபலாஹ் பல்கலைக்கழகம் தொடர்பிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து இந்த பல்கலைக்கழகம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் தொடர்பான முறைகேடுகள் மற்றும் போலி ஆவணங்கள் குறித்து குற்றப்பிரிவு போலீஸார் வழக்குகள் பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்க இயக்குநரகமும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திக்கை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீஸார் இன்று (பிப்ரவரி 5) கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க குற்றப்பிரிவு குற்றப்பிரிவு போலீஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். சித்திக்கின் ரூ.140 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.