சிவகாசி ரயில் நிலையத்தில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளரான கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளது. பட்டாசு நகரமான சிவகாசி குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் இருந்து பட்டாசு ஏற்றுமதி செய்யும் வகையில் சிவகாசியில் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு கொள்முதல் செய்யவும், ஆர்டர் கொடுக்கவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் சிவகாசிக்கு ரயில் மூலம் வருகின்றனர். ஆனால், ரயில் நிலையத்தில் போதிய வசதியில்லை. எனவே ரயில் நிலையத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக சிவகாசி ரயில் நலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இதில் நடைமேடையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழை விட இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “நோய்த்தொற்றைப் போல ஊரெங்கும் பரவிடும் இந்த இந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். சென்னை பூங்கா ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் இந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 29-ம் தேதி “கல்லக்குடியில் தொடங்கியது, சென்னை பூங்கா வரை தொடர்கிறது. அவர்கள் திணிப்பதை நிறுத்தப் போவதுமில்லை. நாம் அதை எதிர்ப்பதில் ஓயப்போவதுமில்லை” என்று சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இந்தி திணிக்கப்பட்டதற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.