சொன்ன தேதியில் படத்தை கொண்டுவர எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆனால் அனைத்தும் கையை மீறி சென்று விட்டது என்று 'ஜன நாயகன்' படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நடித்த கடைசிப்படமான 'ஜன நாயகன்' உலகம் முழுவதும் நேற்று (ஜனவரி 9) ரிலீஸாக வேண்டிய நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் படம் திரையிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் மட்டுமின்றி அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் வெங்கட் நாராயணா தனது எக்ஸ் தளஙப பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோவில்," டிசம்பர் மாதமே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி அவர்கள் சொன்ன திருத்தங்களையும் செய்து மீண்டும் சமர்ப்பித்தோம். U/A சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பட வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த போது ஜன.5-ந்தேதி மாலை படத்தை மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்புவதாக அதிர்ச்சி செய்தி வந்தது. மறு ஆய்வு கமிட்டிக்கு செல்ல நேரம் இல்லாததாலும், புகார் தெரிவித்தது யார் என்றே தெரியாததாலும் உடனடியாக நீதிமன்றம் சென்றோம்.
நீதிமன்றமும் சான்றிதழ் கொடுக்க உத்தரவிட்ட போதும், தணிக்கை வாரியம் உடனே மேல்முறையீட்டுக்கு சென்று இடைக்கால தடை வந்துவிட்டது. ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அனைவரிடமும் தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சொன்ன தேதியில் படத்தை கொண்டுவர எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆனால் அனைத்தும் கையை மீறி சென்று விட்டது. எங்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார்.