சித்திரையில் முத்திரை பதிக்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபகம் சிறப்பாக நடைபெற்றது.
மதுரையில் நடைபெறும் முக்கிய விழாக்களில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவும் முக்கியமாகும்.
மீனாட்சி திருக்கல்யாணம் முடிவடைந்து நேற்று தேரோட்டமும் நடைபெற்ற நிலையில் வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் நேற்று முன்தினம் அழகர் மலையில் இருந்து புறப்பட்டார்.
நேற்று காலை மதுரை மூன்று மாவடியில் மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து பல்வேறு மண்டகப் படிகளில் ஏறி இறங்கி இரவு தல்லாகுளம் பெருமாள் கோயில் வந்தடைந்தார்.
அங்கு அவருக்கு பச்சை பட்டு உடுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அழகருக்கு அணிவிக்கப்பட்டு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
இதை அடுத்து அங்கிருந்து கிளம்பிய கள்ளழகர் இன்று அதிகாலை ஆறு மணி அளவில் வைகை ஆற்றில் இறங்கினர். அப்போது வைகை ஆற்றில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என்று கோஷமிட்டு சர்க்கரை கிண்ணங்களில் சூடம் ஏற்றி வணங்கினர். இப்போது கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து கள்ளழகர் ராமராயர் மண்டகப்படிக்கு சென்றார்.