News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

தஞ்சைப் பெரியகோயிலில் பாண்டியர் திருப்பணிக்கு புதிய ஆதாரங்கள்

தஞ்சைப் பெரியகோயிலில் பாண்டியர் திருப்பணிக்கு புதிய ஆதாரங்கள்
NEWS TODAY TAMIL
Updated on: 31 Jul 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

தஞ்சைப் பெரியகோயிலில் பாண்டியர் திருப்பணிக்கு புதிய ஆதாரங்கள்


முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியதேவரின் உருவச்சிலைகளை ஆவணப்படுத்திய பாண்டியர்கள் தேடி பயணம் – வரலாற்று ஆய்வுக் குழு


தஞ்சாவூர்:


தஞ்சாவூர் பெரியகோயிலில் பாண்டியப் பேரரசர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியதேவர் (கி.பி. 1250–1284) மேற்கொண்ட திருப்பணிகளுக்கான முக்கிய கட்டிடக்கலை, கல்வெட்டு மற்றும் சிற்பவியல் ஆதாரங்களை அடையாளம் கண்டு, அவரது உருவச்சிலைகளை ஆவணப்படுத்தியுள்ளதாக பாண்டியர்கள் தேடி பயணம் – வரலாற்று ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து குழுவின் தலைமை ஆய்வாளர் மணிகண்டன் கூறுகையில், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியதேவர் தமிழக வரலாற்றில் இணையற்ற திருப்பணிகளை மேற்கொண்ட மன்னர்களில் ஒருவராக விளங்கியவர் என்றார். தில்லை நடராஜர் கோயில், திருவரங்கம், மதுரை, திருவேங்கடம் உள்ளிட்ட திருத்தலங்களில் பொன் வேய்தல், துலாபாரம் உள்ளிட்ட அபூர்வமான திருப்பணிகளை மேற்கொண்டதற்காக "பொன் வேய்ந்த மகிபதி", "பொன் வேய்ந்த பெருமான்", "ஹேமாச்சாதன ராஜா" போன்ற சிறப்புப் பட்டங்களைப் பெற்றார்.


மேலும், சோழர்கள் கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த மன்னராக முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியதேவர் வரலாற்றில் தனித்த இடம் பெற்றுள்ளார். அதன் பின்னர் சோழமண்டலத்திலுள்ள பல முக்கிய திருக்கோயில்களில் அவர் மேற்கொண்ட திருப்பணிகளுக்கான சான்றுகள் கல்வெட்டுகள், கட்டிடக்கலை மற்றும் சிற்பவியல் ஆதாரங்கள் மூலம் வெளிப்படுகின்றன.


அவற்றில் முக்கியமானதாக தஞ்சாவூர் பெரியகோயில் விளங்குகிறது. இராஜராஜ சோழன் காலத்தில் இல்லாத தனித்த அம்மன் திருக்கோயில் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதையும், பெரியகோயிலின் மகாமண்டபத்தில் நடைபெற்ற மறுகட்டுமானப் பணிகளையும் கல்வெட்டு மற்றும் கட்டிடக்கலை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.


பெரியகோயிலின் மகாமண்டபத்தில் காணப்படும் யாளி வரிசைகளின் கலைப்பாணி மாற்றம், மாறுபட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது, உட்புற குறுக்குச் சுவரில் இராஜராஜ சோழனின் கல்வெட்டுக் கற்கள் தலைகீழாக மீண்டும் பயன்படுத்தப்பட்டிருப்பது உள்ளிட்ட அம்சங்கள், அப்பகுதி பிற்காலத் திருப்பணிக்கு உட்பட்டதற்கான முக்கிய ஆதாரங்களாக இருப்பதாக ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.


மகாமண்டபம், அம்மன் திருக்கோயில் மற்றும் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் திருக்கோயிலில் காணப்படும் வணங்கும் கோலத்திலான உருவச்சிலைகள் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டதில், தாடி, மீசை, கொண்டை, அரையாடை, கைகூப்பிய வணக்க நிலை உள்ளிட்ட சிற்ப அம்சங்கள் ஒன்றோடொன்று ஒத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்வெட்டு, கட்டிடக்கலை மற்றும் ஒப்பீட்டு வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில், இவ்வுருவச்சிலைகள் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியதேவரைச் சுட்டிக்காட்டுகின்றன என்று பாண்டியர்கள் தேடி பயணம் – வரலாற்று ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.


இந்த ஆய்வின் மூலம் தஞ்சாவூர் பெரியகோயிலில் பாண்டியர்களின் திருப்பணிகள் குறித்த புதிய ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன என்றும், விரிவான ஆய்வறிக்கையும் கல்வெட்டு ஆவணங்களும் விரைவில் வெளியிடப்படும் என்றும் குழுவின் தலைமை ஆய்வாளர் மணிகண்டன் தெரிவித்தார்.


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.