டெல்லியில் 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு சோதனைகள் நடந்து வருகின்றன
டெல்லி முழுவதும் உள்ள 9 பள்ளிகளை குறிவைத்து மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் இன்று (பிப்ரவரி 9) வந்தது. காலை 8:30 மணி முதல் காலை 9:00 மணி வரை டெல்லியில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து டெல்லி காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்பு குழுக்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் படை விரைந்தன.
வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து வெடிகுண்டை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வெடிகுண்டு மிரட்டலால் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக, ஜனவரி 29-ம் தேதி காலை டெல்லியில் உள்ள ஐந்து பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இந்த பள்ளிகளில் நடத்தப்பட்ட தீவிர சோதனைகளுக்குப் பிறகு அந்த மிரட்டல்கள் புரளி என தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் குறிவைக்கப்பட்ட பள்ளிகள் டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள லோரெட்டோ கான்வென்ட், சித்தரஞ்சன் பூங்காவில் உள்ள டான் போஸ்கோ பள்ளி மற்றும் ஆனந்த் நிகேதன் மற்றும் துவாரகாவில் உள்ள கார்மல் கான்வென்ட் வளாகங்கள் ஆகியவை அடங்கும். அதற்கு ஒரு நாள் முன்பு ( ஜனவரி 28) துவாரகா நீதிமன்ற வளாகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது, அது புரளி என கண்டுபிடிக்கப்படடது. மீண்டும், மீண்டும் வரும் மிரட்டல்களின் மூலத்தைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர், புரளிகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.