உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்ற பகல் கனவை வாக்கு என்ற பிரம்மாஸ்திரத்தின் மூலம் தகர்த்தெறிவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜனவரி 13) வெளியிட்டுள்ள வீடியோவில், " நடைபெறும் ஸ்டாலின் திமுக ஆட்சியில் பட்டது போதுமடா சாமி என மக்கள் கண்ணீர் கடலில் தள்ளாடி வருகிறார்கள் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தின் வாயிலாக திமுக அரசு ஒவ்வொரு குடும்பத்தின் கனவு என்ற பெயரில் ஆலோசனை கேட்டு வருகிறார்கள். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது மக்கள் இடத்தில் மாவட்ட வாரியாக, தொகுதி வாரியாக கோரிக்கை மனுக்களை வாங்கி அதை பெட்டியில் பூட்டு போட்டார்.
அந்த மக்கள் கனவு இன்னும் திறந்து பார்ப்பதற்கு பெட்டி சாவி ஸ்டாலின் கையில் தான் உள்ளது. அது எங்கே தொலைந்து போனது என்று தெரியவில்லை. பெட்டியில் பூட்டி வைத்திருக்கும் அந்த மனுக்களை சாவி வைத்து திறந்து பார்த்தாலே மக்கள் கனவு என்னவென்று தெரியும் . அதைப் பார்க்கவே நேரம் இல்லாத போது தன் மகன் உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது முதலமைச்சராக்க வேண்டும் என்று ஸ்டாலின் பகல் கனவை நிறைவேற்ற உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு ,போதை பொருள் நடமாட்டம், நிர்வாக குளறுபடி என தமிழகம் தலைகுனிந்து உள்ளது தமிழகத்தை தலைநிமிர மக்கள் கனவு காண்கிறார்கள் ஸ்டாலின் அவர்களே உங்களால் இந்த கனவை நிறைவேற்ற முடியுமா? தமிழகம் விதவைகள் மாநிலமாக மாறி வருகிறது. பெர்மிட் இல்லாத டாஸ்மாக் கடைகள், பார்கள் இவைகள் எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் கனவு காண்கிறார்கள். ஸ்டாலின் அவர்களே இந்த கனவை உங்களால் நிறைவேற்ற முடியுமா ?
உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் அரசு பேருந்துகள் உள்ளன . அந்த பேருந்துகள் எல்லாம் மக்கள் பயணம் செய்யும வகையில் கிடைக்குமா என்ன மக்கள் கனவு காண்கிறார்கள். பாலியல் சம்பவங்களால் பச்சைக் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை பாதுகாப்பு இல்லாமல் தெருவில் நடந்து கூட போக முடியவில்லை இதை எல்லாம் உங்களால் தடுத்து நிறுத்த முடியுமா? திமுக ஆட்சியில் அங்கன்வாடி பணியாளர்கள், மாணவர்கள், மீனவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சத்துணவு பணியாளர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களின் உரிமையை கிடைக்க உரிமை போராட்டம் நடத்தி வருகிறார்கள் அவர்கள் உரிமை கிடைக்க கனவு காண்கிறார்கள் அந்த உரிமையை உங்களால் நிறைவேற்றி தர முடியுமா?
மொத்தத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி விபத்தில் முதலமைச்சரான ஸ்டாலின், மக்களுக்கு எப்படியெல்லாம் வாட்டி வதைக்க முடியுமோ அப்படி எல்லாம் மக்களை வாட்டி வதைத்து மக்களை வஞ்சித்து வரும் ஸ்டாலினுக்கு முடிவுரை எழுதத் தான் மக்கள் கனவு காண்கிறார்கள். அந்த கனவை உங்களால் நிறைவேற்ற முடியாது, நிச்சயம் இந்த தாய்த்தமிழ் நாட்டு மக்கள் வாக்குறுதி என்ற பிரம்மாஸ்திரத்தில் மூலம் 2026-ல் பயன்படுத்துவார்கள்..
உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்ற பகல் கனவை வாக்கு என்ற பிரம்மாஸ்திரத்தின் மூலம் தகர்த்தெறிவார்கள். இன்றைக்கு மக்களின் நியாயமான கோரிக்கையை கனவை நிறைவேற்றும் வகையில் மக்களாட்சி மலர செய்ய எடப்பாடியாருக்கு மக்கள் மகுடம் சூட்டுவார்கள். இன்றைக்கு தாய்மார்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என ஒட்டுமொத்த தமிழினத்தின் நம்பிக்கையாக எடப்பாடியார் உள்ளார். திமுகவின் ஏமாற்று வேலை ஒருபோதும் நிறைவேற முடியாது. அதற்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள் எடப்பாடியார் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் மக்களின் கனவை நிச்சயமாக நிறைவேற்றுவார்" என்று கூறினார்.