உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று(ஜனவரி 17) கோலாகலமாக தொடங்கியது.
தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் நடந்து முடிந்தன.
இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் அலங்காநல்லூரில் தொடங்கியது. இதனை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியுடன் தொடங்கி வைத்தனர். முதலில், அலங்காநல்லூரில் உள்ள முக்கிய கோயில்களின் காளைகள் வாடிவாசல் வழியாக முதலில் அவிழ்த்து விடப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான காளைகளும், மாடு பிடிவீரர்களும் அலங்காநல்லூருக்கு வருகை தந்துள்ளனர்.
இன்றைய போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்படுகிறது. அதே போன்று களத்தில் சிறந்து விளையாடும் மாட்டின் உரிமையாளருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக டிராக்டர் பரிசாக வழங்கப்படவுள்ளது. இரண்டாவது சிறந்த காளையின் உரிமையாளருக்கு மோட்டார் பைக்கும், மூன்றாவது சிறந்த காளையின் உரிமையாளருக்கு எலெக்ட்ரிக் பைக்கும் வழங்கப்படவுள்ளன. 12 சுற்று வரை போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் சுற்றில் கருவனூர் அகத்தியன் 3 காளைகளையும், கள்ளந்திரி கோகுல்ராஜ், அலங்காநல்லூர் அஜித, மதுரை பிரசாத், வாடிப்பட்டி சூர்யா ஆகியோர் தலா 2 காளைகளை பிடித்துள்ளனர்.மாடு பிடி வீரர்களுக்கு தங்கக்காசு, கட்டில், பீரோ, சைக்கிள், சேர், ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.