கேரளாவில் பாண்டியர் வம்சாவளியினரை சந்தித்த ‘பாண்டியர்கள் தேடிப் பயணம்’ ஆய்வுக்குழு
பூஞ்சார் அரச குடும்பத்தினரை சந்தித்தனர்
பாண்டியர் வரலாற்றை முழுமைப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் பாண்டியர்கள் தேடிப் பயணம் வரலாற்று ஆய்வுக்குழுவினர் மணிகண்டன் உதயசங்கர் கருப்புசாமி வாசுதேவன் உட்பட குழுவினர், கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் பூஞ்சார் பகுதியில் வாழ்ந்து வரும் பாண்டியர் வம்சாவளியினரான அரச குடும்பத்தினரை நேரில் சந்தித்து முக்கியமான வரலாற்றுத் தகவல்களை சேகரித்துள்ளது.
தேனி மாவட்டம் கூடலூரில் தொடங்கிய இந்த ஆய்வு, பாண்டியர்கள் இடம்பெயர்ந்த வரலாற்றுப் பாதையைத் தொடர்ந்து பூஞ்சார் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 11ம் நூற்றாண்டில் மட்டுமன்றி, அதற்கு முன்னதாகவே 10ம் நூற்றாண்டிலேயே பாண்டிய நாட்டிலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
பூஞ்சார் அரச குடும்பத்தினரான
சுதா வர்மா, சியாமளா தேவி வர்மா, மதுகுமார் வர்மா ஆகியோரை சந்தித்த ஆய்வுக்குழு, பல தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்டு வந்த வரலாற்று குறிப்புகள், ஆவணங்கள் மற்றும் வாய்வழிக் குறிப்புகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, பாண்டியர்களின் அடையாளமாக விளங்கும் இரட்டை மீன் சின்னம் மற்றும் வீரத்தை குறிக்கும் வீர வாள் ஆகியவை பூஞ்சார் அரச குடும்பத்தினருக்கு ஆய்வுக்குழுவினரால் மரியாதைச் சின்னங்களாக வழங்கப்பட்டன. இது பாண்டியர் வம்சத் தொடர்ச்சியையும், வரலாற்று உறவினைப் பிரதிபலிக்கும் முக்கிய நிகழ்வாகும்.
மதுரையில் இருந்து இடம்பெயரும் பொழுது மீனாட்சியம்மன் கோவிலில் இருந்த மீனாட்சி – சொக்கநாதர் உற்சவர் சிலை கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் ஆய்வில் வெளிவந்துள்ளன. அந்தச் சிலையை அடிப்படையாகக் கொண்டு பூஞ்சார் அரண்மனை அருகில் “மதுரை மீனாட்சி” என்ற பெயரில் கோவில் கட்டப்பட்டு, இன்றளவும் அதே மரபில் வழிபாடு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், அக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதுடன், அருகில் சாஸ்தா கோவில் ஒன்றும் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பாண்டியர் மரபு மற்றும் கேரளத்தின் உள்ளூர் சமய மரபுகளின் ஒருங்கிணைப்பை எடுத்துக்காட்டுகிறது.
ஆய்வுக்குழுவின் தலைமை ஆய்வாளர் மணிகண்டன் கூறுகையில்,
“பாண்டியர்கள் 11ம் நூற்றாண்டுக்கு முன்னரே இடம்பெயர்ந்ததற்கான உறுதியான ஆவணங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, கேரள தேசத்திற்கு இடம்பெயர்ந்த ஐந்து பாண்டிய வம்ச கிளைகள் அங்கு ஆட்சி புரிந்ததற்கான சான்றுகள் வெளிவந்துள்ளன. பல இடங்களில் அடையாளங்கள் அழிந்து போனாலும், குடும்ப மரபுகள் மற்றும் கோவில் வழிபாடுகள் வழியாக வரலாறு தொடர்ந்து உயிருடன் உள்ளது,” என்றார்.
மேலும், “இதுவரை பாண்டிய வரலாற்றில் இடம்பெறாத சில மன்னர்களின் பெயர்களையும், அவர்களின் ஆட்சிக் குறிப்புகளையும் தொகுத்து விரைவில் வெளியிட உள்ளோம். தேனி மாவட்டம் கூடலூரில் தொடங்கிய ஆய்வை கேரள மாநிலம் பூஞ்சார் வரை முழுமைப்படுத்துவது எங்கள் முக்கிய இலக்காகும்,” என்றும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் மூலம் இதுவரை வெளிவராத பல அரிய வரலாற்று ஆவணங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பாண்டியர் வரலாற்றை புதிதாக வடிவமைக்கும் இந்த முயற்சிக்கு பாராட்டுகள்.