திமுக கூட்டணியில் பாமக இடம் பெறுவது குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்த கருத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த நிலையில், கூட்டணி கட்சிகள் தொகுதி பேரம் நடத்தி வருகின்றன. அத்துடன் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணியில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. வலுவான கூட்டணி என்று கூறப்படும் திமுகவில் தற்போது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பிரச்னை செய்து வருகிறது. அந்த கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி, தவெகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதிமுக- பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. மேலும் பல கட்சிகள் இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் தலைமையிலான பாமக இணையும் என்று பேசப்படுகிறது. ஆனால், பாஜக, பாமக இடம் பெறும் எந்த கூட்டணியிலும் விடுதலை சிறுததைகள் கட்சி இடம் பெறாது என்றும் பாமக இடம் பெற்றால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தி வருகிறார்..
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில்," டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் இருவரும் நேருக்கு நேராக உட்கார்ந்து பேசினால் போதும்; விசிகவின் நிலைப்பாடு நிச்சயம் மாறும்" என கூறினார். இதற்கு விசிக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின். திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி தமது எக்ஸ் பக்கத்தில், “ கூட்டணியில் யார்யார் என்பதை திமுக முடிவெடுக்கும் என்பதைதான் நாங்களும் சொல்லி விட்டோமே? சாதியவாத மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை விசிக மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை” என்று செல்வப்பெருந்தகைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.