தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை 18 வயது இளம்பெண் குத்திக் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த முர்வால் கிராமத்தில் சுக்ராஜ் பிரஜாபதி(50) என்பவர் ஒரு வீட்டில் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். சுக்ராஜ் பிரஜாபதி உடல், தலை ஆகிய பகுதிகளில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிய காயம் இருந்தது. இதனால் சுக்ராஜ் பிரஜாபதி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடைபெற்ற போது, சுக்ராஜ் பிரஜாபதியை அவர் கொலை செய்தது தெரிய வந்தது. இளம்பெண் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து அவரை சுக்ராஜ் பிரஜாபதி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அங்கிருந்த கூர்மையான கம்பியால் சுக்ராஜ் பிரஜாபதியை தாக்கியதாகவும், அதில் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினார். இதையடுத்து இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் பண்டா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.