தமிழ்நாட்டில் நாளை(டிச.23) முதல் சில இடங்களில் வழக்கத்தை விட குளிர் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாடு, , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (டிச.23) முதல் டிச.24-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக டிச.25, 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 24-ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலை அதாவது குளிர் ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும். நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
ஊட்டியில் அதிகபட்சமாக 7 டிகிரி செல்சியஸ், சமவெளிப்பகுதியான தருமபுரியில் 15 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.