ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் நாளை விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான 24 மணி நேர கவுன்டவுன் இன்று (டிசம்பர் 23) தொடங்கியது.
ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, நாளை (டிசம்பர் 24) காலை, 8:54 மணிக்கு, எல்விஎம் 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், ஏவுதளத்தில் செயற்கைக்கோள் தயாராக இருக்கும் படத்தை இஸ்ரோ சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
விண்ணில் ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்டவுன் இன்று (டிசம்பர் 23) காலை 8.54 மணிக்கு தொடங்கியது. இந்த 'புளூபேர்ட்' செயற்கைக்கோளை அமெரிக்காவை சேர்ந்த ஏஎஸ்டி நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கியுள்ளது.
இதன் எடை 6,500 கிலோ. இது, தொலைதுார கிராமங்களுக்கு, செல்போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை, நம் நாட்டின், 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்ணில் செலுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.