கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக(தவெக) தலைவர் நடிகர் விஜய், கடந்த செப்ம்ர் 27-ம் தேதி கரூரில் பரப்புரையில் ஈடுபட்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திலும் கடந்த மாதம் மூன்று நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பிரசார வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதன் ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை முடிந்த பின், பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் இந்த விசாரணையின் தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதில், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று(ஜனவரி 12) காலை 11 மணிக்கு அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த சம்மனை ஏற்று சிபிஐ முன் ஆஜராக தவெக தலைவர் விஜய் இன்று தனது பனையூர் வீட்டில் இருந்து தனி விமானத்தில் காலை 10.30 மணியளவில் டெல்லி சென்றார். ஒய் பிரிவு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட விஜய், சிபிஐ முன்பு விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.