ரயில்வே துறையின் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுரேஷ் கல்மாடி, இன்று காலமானார். அவருக்கு வயது 81.
மகாராஷ்டிரா மாநிலம் புணேயில் 1944 மே 1-ம் தேதி பிறந்த சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக பணியாற்றியவர். புணே மக்களவைத் தொகுதி எம்.பியாக வெற்றி பெற்றவர். ரயில்வே துறையின் மத்திய இணை அமைச்சராகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் திறம்பட செயல்பட்டவர்.
இவர் உடல் நலன் பாதிக்கப்பட்டு புணேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுரேஷ் கல்மாடி இன்று (ஜனவரி 6) காலமானார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காலமான சுரேஷ் கல்மாடிக்கு மனைவி, மகன், மருமகள், இரண்டு மகள்கள், பேரன்கள் உள்ளனர். விளையாட்டு துறை நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சுரேஷ் கல்மாடி கடந்த 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். அவரது இறுதி நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.