டெல்லியில் உள்ள மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறையின் இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் இன்று நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறையின் இணை அமைச்சர் எல். முருகன் ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டிற்கான பொங்கல் விழா இன்று (ஜனவரி 14) நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இவ்விழாவில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகள், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும்ம் பங்கேற்கின்றனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக நீதிபதிகள், பல உயர் அதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், இந்திய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், குஷ்பு, சரத்குமார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடன அமைப்பாளர் கலா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.