அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர் நிகிதா கோடிஷாலா(27). இவர் அமெரிக்காவில் எலிகாட் நகரத்தில் டேட்டா மற்றும் ஸ்ட்ராடெஜி அனலிஸ்ட்டாக வேலை செய்து வந்தார். இவர் புத்தாண்டு தினத்தில் இருந்து காணாமல் போனதாக ஜனவரி 2-ம் தேதி அவரது ஆண் நண்பர் அர்ஜூன் சர்மா(26), ஹோவர்ட் கவுண்டி போலீஸில் புகார் செய்தார். டிசம்பர் 31-ம் தேதி தனது வீட்டிற்கு வந்த நிகிதா அதன் பின் காணாமல் போனதாக அவரது புகாரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து நிகிதாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மேரிலாண்டில் உள்ள அர்ஜூன் சர்மாவின் அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கு கத்திக்குத்து காயங்களுடன் நிகிதா சடலமாக கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அர்ஜூன் சர்மா இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றது தெரிய வந்தது.
டிசம்பர் 31-ம் தேதி இரவு நிகிதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அர்ஜூன் சர்மா , நிகிதாவின் முன்னாள் காதலன் என்று கூறப்படுகிறது. நிகிதா கோடிஷாலாவை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு அன்றைய தினமே அர்ஜூன் சர்மா விமானம் மூலம் இந்தியாவிற்கு தப்பியதாக புலனாய்வு அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.
இந்தியாவிற்கு தப்பிச் சென்ற அர்ஜூன் சர்மாவை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர். இதனிடையே நிகிதாவின் குடும்பத்தினரை இந்திய தூதரகம் தொடர்பு கொண்டு பேசியுள்ளது. அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக கூறியுள்ளது. அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.