மதுரையில் ஆதரவற்றோருக்கு ஐந்து வருடமாக தொடர்ந்து மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் அன்னமிட்டு வருகிறது. இதன் நிறுவனர் நெல்லை பாலு 6 லட்சம் பேருக்கு அன்னமிட்டுள்ளார்.
தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று மகாகவி பாரதியும், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று' வள்ளலாரும் கூறினர். உலகில் கொடுமையான நோய் ஒன்று உண்டென்றால் அது பசி மட்டும்தான். எனவே தான், பசிப்பிணி என்கிறோம். இந்த நிலையில் ஆதரவற்றோர், சாலையில் அனாதைகளாக இருப்போருக்கு, கடந்த 5 வருடமாக தினமும் மதிய உணவினை வழங்கி வரும் மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் சார்பில் நேற்று (ஜனவரி 18) 6-வது வருடம் துவக்கமாக முக்தீஸ்வரர் கோயில் முன்பு உணவு வழங்கப்பட்டது.
தை அமாவாசை என்பதால் முக்தீஸ்வரர் கோயிலில் தர்ப்பணம் கொடுப்பதற்கு திரளாக மக்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் சார்பில் உணவு வழங்கப்பட்டது பித்ரு கடனை அடைக்க சாஸ்திரம் சுட்டிக் காட்டும் வழி அன்னதானம். பித்ரு சாபங்கள் இருந்தால், பிள்ளைகள் விருத்தி இல்லாமல் இருப்பது போன்ற பல தீமைகள் வீட்டில் அரங்கேறும் என்பர்.
இவற்றையெல்லாம் போக்கி முன்னோர் ஆசிர்வாதம் பெற்று, நம் சந்ததியினர் மகிழ்வோடும் ஆரோக்கியத்தோடும் வாழ ஒரே வழி 'அன்னதானம்!' மட்டுமே என்பதால் மதுரை அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் சார்பில் நெல்லை பாலு தொடர்ச்சியாக ஐந்து வருடங்களாக உணவு வழங்கி வருகிறார் " இன்றுடன் 5வருடம் நிறைவு பெற்று 6வருடம் துவங்குகிறது. இதுவரை 6 லட்சம் பேருக்கு வயிற்று பசியாற்றியுள்ளோம். உயிர் உள்ளவரை இப்பணி தொடரும்" என்று அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தெரிவித்தார்.