பாட்டாளி மக்கள் கட்சி பெயரைப் பயன்படுத்தக் கூடாது என அன்புமணிக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாளிதழ்களில் பொது விளம்பரம் மூலம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமகவில் ஏற்பட்ட அதிகாரப்போட்டி உயர்நீதிமன்றம் வரை பிரச்னையாகி நிற்கிறது. யார் தலைவர் என்று டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் பாமகவில் நடக்கும் யுத்தம் கட்சியை இரண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நாளிதழ்களில் இன்று பொது விளம்பரம் மூலம் அன்புமணிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த விளம்பரத்தில், “இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் கடைசியாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் W.P.(C) No.18311/2025 வழக்கில், 04.12.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் மருத்துவர் அன்புமணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தேர்தல் ஆணையம் 09.09.2025 மற்றும் 27.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவுகள் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், சட்ட அதிகாரமற்றவை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது. எனவே, எந்த அரசியல் கட்சியும், தனிநபரும், அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும்.
மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சட்டப்படி கடுமையான நடவடிக்கை தவறாமல் மேற்கொள்ளப்படும் என்பதும் இதன் மூலம் கடைசியாக எச்சரிக்கப்படுகிறது.
இது எச்சரிக்கை, அலட்சியம் அல்ல: மருத்துவர் அன்புமணிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எந்தவித அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகளையும் எடுக்க ஒரு துளி உரிமையும் இல்லை. அரசியல் கட்சிகள், தனிநபர்கள், அல்லது வேறு எந்த அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும்.
நீதியை மீறினால் , விளைவுகள் கடுமையானவை: மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தவறாமல் தொடரப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.