தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் நான்கு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வினியோகத்தை டிசம்பர் 15-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கடந்த டிசம்பர் 23- ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தற்போது விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 28- ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கட்சியினர் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, டிசம்பர் 28-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் டிசம்பர் 31-ம் தேதி புதன்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கட்சியினர் அதற்கான படிவங்களை பெறலாம். அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.