விஜய்யை பார்த்து திமுக தான் பயப்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி, தவெக ஆகியவை தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தவெகவை அதிமுக கூட்டணிக்கு கொண்டு வர பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால், திமுகவை விமர்சனம் செய்து கொண்டிருந்த தவெக தலைவர் விஜய், திடீரென அதிமுகவையும் விமர்சனம் செய்துள்ளார். இதற்கு அதிமுக பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அத்துடன் தனியார் சேனல்களுக்கும் பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் விஜய் வருகையால் பயப்படுகிறீர்களா என ஒரு செய்தியாளர் வினா எழுப்பினார். அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,, "விஜய்யைப் பார்த்து திமுக தான் பயப்பட வேண்டும். அந்த கட்சி. பயப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒருபுறம் விஜய்யின் அரசியல் வருகை, மற்றொருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வலு ஆகியவை திமுகவை பயமுறுத்துகின்றன.
இந்த பயத்தின் காரணத்தால் தான் திமுக இலவசங்களை அறிவிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதை கலாசாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது" என்றார்.