தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் விடியா ஆட்சி செய்யும் திமுகவை தொடர் தோல்விகளால் அலறவிட்டவர் எம்.ஜி.ஆர் என்று நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மக்கள் மனதில் மன்னராக நிரந்தர சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் தலைவர், இன்று தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் விடியா ஆட்சி செய்யும் திமுகவை தொடர் தோல்விகளால் அலறவிட்டவர்.
நேற்று, இன்று, நாளை என்று, என்றுமே மக்களின் மனதில் இதயக்கனியாக இருப்பவர் வள்ளல், பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன். மக்கள் தலைவர், புரட்சித்தலைவர், பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆரின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமைக்கழகம்
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமைக்கழகத்தின் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில்," வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் என்றும் எங்கள் வாத்தியார் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள்.
தீயசக்தியின் பிடியில் இருந்து மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க, அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கண்டெடுத்த மக்கள் திலகம். திரை ஆளுமையாக தத்துவங்களையும், முதல்வராக மக்கள் நலத் திட்டங்களையும் அள்ளித் தந்த பொன்மனச் செம்மல். இன்றும், என்றும், நம் இதயதெய்வமாக நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் நம் புரட்சித் தலைவர் அவர்களின் பிறந்தநாளில், புரட்சித் தலைவர் அவர்கள் கூறிய மக்களாட்சியை, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அமைத்திட சூளுரைப்போம். வாழ்க புரட்சித்தலைவர் நாமம். வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்று கூறப்பட்டுள்ளது.