மூதறிஞர் ராஜாஜி செய்த தியாகங்களை நம் நாடு எப்போதும் நன்றியுடன் நினைவு கூரும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜியின் 147-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " ஸ்ரீ சி.ராஜாகோபாலாச்சாரியை பற்றி நினைக்கும் போது, சுதந்திர போராட்ட வீரர், சிந்தனையாளர் உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகள் தான் என் மனதில் எழுகின்றன. அவரது பிறந்த நாளன்று அவருக்கு மரியாதை செலுத்த கடமைப்பட்டுள்ளேன்.
20-ம் நூற்றாண்டின் கூர்மையான சிந்தனை கொண்டவராக திகழ்ந்த இவர், மதிப்புகளை உருவாக்குவதில், மனிதர்களின் கண்ணியத்தை காப்பாற்றுவதிலும் உறுதி பூண்டிருந்தார். அவர் செய்த தியாகங்களை நம் நாடு எப்போதும் நன்றியுடன் நினைவுகூரும்.
இளம் ராஜாஜியின் போட்டோ, அவரது அமைச்சர் நியமன அறிவிப்பு, 1920ல் தொண்டர்களுடன் எடுத்த புகைப்படம் மற்றும் காந்தி சிறையில் இருந்த போது, ராஜாஜியால் எழுதப்பட்ட கட்டுரை போன்ற மதிப்புமிக்க பொக்கிஷங்களை பகிர்ந்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.