ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி -சி62 ராக்கெட் இன்று (ஜனவரி 12) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.17 மணிக்கு பிஎஸ்எல்வி -சி62 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட்டாகும். இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.
இந்த ராக்கெட் மூலம், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ) உருவாக்கிய இஓஎஸ்என்-1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பெயின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டில் இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.