மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் அணிவகுக்கும் காளைகளை காளையர்கள் அடக்கி பரிசுகளை குவித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளான நேற்று(ஜனவரி 15) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மாட்டுப் பொங்கல் தினமான இன்று (ஜனவரி 16) மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் தாமதமானதால் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் 5,757 காளைகளும், 1,913 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். டாக்டர்களின் தீவிர மருத்துப் பரிசோதனைக்கு பிறகே, மாடுபிடி வீரர்கள் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். அவருக்கு அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த போட்டியை நடிகர் சூரி உள்பட பலர் கண்டு ரசித்து வருகின்றனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளைப் பிடித்த காளையர்களுக்கும் தங்க காசு, கட்டில், பீரோ, சைக்கிள், சேர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை (ஜனவரி 17) நடைபெறுகிறது.