கரூர் கூட்ட நெரிசல் சம்பந்தமான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் நேரில் ஆஜராகினர்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடைபெற்ற பிரசாரத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிஐ அதிகாரிகள் கரூரில் தனி அலுவலகம் அமைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தவெக நிர்வாகிகள் டிசம்பர் 29-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன், சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் இன்று (டிசம்பர் 29,) டெல்லி சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகினர்.கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட அமைப்பு உள்ளிட்டவை தொடர்பாக இவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.