ஜப்பானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற சிறப்பை சானே தகைச்சி பெற்றுள்ளார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் பிரதமராக சானே தகைச்சி கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்றார். இவரது கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் குறைந்த அளவே பெரும்பான்மை இருந்தது. ஆனால், மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. இதையடுத்து தனது செல்வாக்கை நிரூபிக்க தேர்தலை நடத்த முடிவு செய்தார். இதையடுத்து ஜப்பானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கான உத்தரவை பிரதமர் சானே தகைச்சி பிறப்பித்தார். அத்துடன் ஜப்பானில் பிப்ரவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
இதையடுத்து ஜப்பான் நாட்டில் நேற்று (பிப்ரவரி 8) தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இந்தத் தேர்தலில் ஆளும் எல்டிபி கட்சி மெஜாரிட்டியைப் பெற்று சானே தகைச்சிக்கு வெற்றி பெற்றார்.. இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு நாட்டின் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற சானே தகைச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்," தேர்தலில் நீங்கள் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள் சானே தகைச்சி. இந்தியா-ஜப்பான் இடையே சிறப்பான மற்றும் உலகளாவிய உறவுகள், சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. உங்கள் தலைமை இந்தியா-ஜப்பான் நட்புறவை மேலும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.