வயதான பெற்றோரை ரோட்டில் தள்ளுவதும், முதியோர் இல்லத்தில் சேர்ப்பதுமான நிலை அதிகரித்து வருவது வேதனை தருகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர் வடமலை வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரை விளாச்சேரி ஐஸ்வர்யம் முதியோர் காப்பகம் மற்றும் புன்னகை பூக்கள் சிறப்பு குழந்தைகள் பள்ளி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஐஸ்வர்யம் டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் பாலகுருசாமி தலைமை வகித்தார். மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அன்பழகன், மதுரை செய்தியாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், பராமரிப்பில் உள்ள வாழ்வின் இறுதிக் கட்டத்தில் உள்ள 160 -க்கும் மேற்பட்ட முதியவர்கள் கலந்து கொண்டனர். சிறப்புக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர் வடமலை, சிறப்பு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "ஒரு மனிதன் சமூகத்தில் பணியாற்றும்போது இருக்கும் மரியாதை, பணி ஓய்வுக்கு பிறகு குறையும். அவர்களது வயோதிக காலத்தில் குழந்தைகள் அவர்களை கவனிக்க வேண்டும். அது அவர்களின் கடமை.
ஆனால், பெற்றோர்களைக் கவனிக்காமல் பிள்ளைகளே ரோட்டோரத்தில் விட்டு விடுகிற நிலை அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு சேவை மனப்பான்மையோடு உள்ள தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருவது பாராட்டுக்குரியது. பொதுமக்களும் கருணை உள்ளத்தோடு சேவை செய்ய முன்வர வேண்டும்" என்று அவர் பேசினார்.