உத்தாரகண்டில் மினி பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உத்தாரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் ராம்நகரை நோக்கி 18 பயணிகளுடன் மினி பஸ் இன்று காலை சென்று கொண்டிருந்தது. பிக்கியாசன் பகுதியில் உள்ள ஷிலாபானி என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த எஸ்டிஆர்எஃப் மற்றும் போலீஸார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பள்ளத்தாக்கில் இருந்து பஸ்சை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பஸ்சுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணி அதனால் தாமதமானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தாரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.