புதுக்கோட்டையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு டிரோன்கள் பறக்க நாளை (ஜனவரி 4) தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வருகிறார். இதன் நிறைவு விழா பொதுக்கூட்டம், புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தில் பாலன் நகர் அருகே பள்ளத்திவயல் பகுதியில் நாளை (ஜனவரி 4) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இதனையொட்டி டிரோன்கள் பறக்க நாளை தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடுபவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை கூடுதல் டிஜிபி மகேஸ்வர தயாள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஸ் நிர்மல் குமார், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா உடனிருந்தனர்.