நான் அரசியலுக்கு வந்தவுடன் கடவுள் நம்பிக்கை உண்டு என அறிவித்ததற்கு காரணம், உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லித் தரும் என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.
மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று நடைபெற்றது. இவ்ழாவில் தவெக தலைவர் நடிகர் பேசுகையில், “ பொங்கல், தீபாவளி, ரம்ஜான் , கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகையையும் பகிர்ந்து கொள்வதுதான் நமது ஊர். வாழ்க்கை முறையும், வழிபாட்டு முறையும் வேறு வேறு என்றாலும் நாம் எல்லோருமே சகோதரர்கள்தான்.
அதனால்தான், நான் அரசியலுக்கு வந்தவுடன் கடவுள் நம்பிக்கை உண்டு என அறிவித்ததற்கு காரணம், உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லித் தரும். அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தாலே போதும் அனைத்து பிரச்னையையும் வென்றுவிடலாம்.
கடவுளுடைய அருளும், மக்களை நேசிக்கிற அன்பும், வலிமையும், உழைப்பும் இருந்தாலே போதும், எப்படிப்பட்ட போராட்டத்தையும் எதிரிகளையும் ஜெயிக்கலாம். ஒரு உறுதியை கொடுக்க விரும்புகிறேன். நானும், தவெகவினரும் சமூக நல்லிணக்கத்தை 100 சதவீதம் பாதுகாப்போம். எந்தவித சமரசமும் இருக்காது.
அதற்காகதான் நமது கொள்கைக்கு மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கை என பெயர் வைக்கப்பட்டது. கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைத்து புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே” என்று பேசினார்.