கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன் தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நாட்டுடமையாக்கும் வேலையில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
இந்த நிலையில், கச்சத்தீவு அருகே ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டியதாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை கைது செய்தனர். அத்துடன் அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை காங்கேசன் முகாமிற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.